புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



2009 நிறைய நல்லதுகளும் கெட்டதுகளும் கலந்துதான் முடிய போகிறது. மகிழ்ச்சி, வலி, அவமானம், சோகம், திருப்தி எல்லாம் கலந்து வந்தாலும் மகிழ்ச்சி கொஞ்சம் அதிகமாகவே இருந்துள்ளது. ஆனந்தமாக ஆரம்பித்தது 2009. நடுவில் கொஞ்சம் சோம்பலாகி சோகமாகி வாழ்க்கை ஒரு வட்டமென காட்ட மீண்டும் ஆனந்தத்திலேயே முடிகிறது.

பதிவுலக நண்பர்களை சிலரை எல்லாம் முதன் முதலாக சந்தித்து எனக்கு சந்தோஷங்களையும் அவர்களுக்கு எல்லாம் சோகங்களையும் தந்தது இந்த வருடத்தில்தான். சில வருடங்களாகவே யோசித்து கொண்டேயிருந்த ஒரு விஷயத்தில் இறுதியாய் தைரியமாய் ஒரு முடிவை எடுக்க வைத்ததும் இந்த 2009 தான். எல்லாவற்றுக்கும் மேலாக ரிதன்யா என்ற பொக்கிஷம் கிடைத்த வருடம். அலுவலகம் முடிந்து ஆறு மணிக்கு வீட்டிற்கு சென்றால் அடுத்த நாள் காலை 8 மணி வரை அவளுடனே நேரம் கழிகிறது. சின்ன சின்ன செய்கைகளாலும் பெரிய பெரிய புன்னகைகளாலும் என் சோர்வை , சோம்பலை, சோகத்தை மறக்க வைக்கிறாள்.


2010த்தையும் 2009 தந்த அனுபவங்களின் துணையோடும் நண்பர்களின் வழிகாட்டுதலோடும் கடக்க இயலும் என்ற நம்பிக்கை இருக்கிறது. புதியதொரு வாழ்க்கைக்கும் புதியதோர் இட மாறுதலுக்கும் தயார் செய்துக் கொண்டுள்ளேன்.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஒரு வேளை அப்படித்தான் இருக்குமோ


போன வாரம் மூ தேவியர் (சரியா ஸ்பேஸ் விட்டு படிங்க) திரும்ப சந்திச்சோம். மூன்று தேவியர் யாருன்னு தெரியுனுமின்னா இங்கே அப்புறம் இங்கே வாங்க (பழைய பதிவுக்கு எப்படி எல்லாம் விளம்பரம் தேடவேண்டி இருக்கு)

வடிவு, உஷா அப்புறம் நானு மூணு பேரும்தான் அந்த முப்பெரும் தேவியருன்னு தெரிஞ்சுதா சரி மேலே வாங்க. பேசிக்கிட்டு இருக்கும்போது ஆபிஸ் பத்தி பேச்சு வந்ததா. வடிவு இப்ப புது ஆபிசில சேர்ந்து இருக்கா. அங்க வேலை கொஞ்சம் கஷ்டமா இருக்குன்னு சொல்லிகிட்டு இருந்தா.

உஷா, ரொம்ப கஷ்டமா இருக்காடின்னு வடிவுக்கிட்ட‌ அக்கறையா விசாரிக்க

வடிவும், விடு ஆறு மாசத்தில கஷ்டம் எல்லாம் பழகி போயிடுமுன்னு சின்சியர் சிந்தாமணியா பதில் சொல்லிக்கிட்டு இருந்தா.

நடுவுல புகுந்த நான் உனக்கா உங்க ஆபிசில இருக்கிறவங்களுக்கா ஒரே ஒரு கேள்வியை கேட்க அதுக்கப்புறம் வடிவு ரொம்ப நேரம் என்கிட்ட பேசவே இல்லை.

அப்ப பார்த்து வடிவுக்கு ஆபிசில இருந்து போன் வர அவ இங்க இருந்துட்டே கோடிங் சொல்ல ஆரம்பிச்சா. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. ஏன்னு கேள்வி கேட்கிறவங்க எல்லாம் ஆட்காட்டி விரலை கண்ணுக்கு நேரா நீட்டி சுத்த ஆரம்பிங்க. ஏன்னா நான் இப்ப நான் கொசுவர்த்தி சுத்த போறேன்.

நாங்க மூணு பேரும் காலேஜ் படிக்கும்போது பார்ட் டைமா டேட்டா என்ட்ரி வேலைக்கு போய்கிட்டு இருந்தோம். அப்ப ஒரு நாள் எங்க அக்கா வீட்டுக்காரர் எங்க வீட்டுக்கு வந்து இருந்தார். அவர் சாப்ட்வேர் சயின்டிஸ்டு. அவர் அவரோட அமெரிக்க வாழ்க்கை பெருமைகளை பேச நாங்க நாங்களும் இங்க இப்ப பார்ட் டைம் ஜாப் பாத்துதான் எங்க படிப்ஸ்! எல்லாம் பார்த்துக்கிறோமுன்னு பீலா விட அங்க ஆரம்பிச்சது ஏழரை.

என்ன செய்யறீங்க. என்ன அவுட்புட் என்ன இன்புட் அப்படின்னு பதிலே தெரியாத கேள்விகளை அவர் கேட்டுக்கிட்டே இருக்க‌ , (கேள்வி கேட்கறது ஈசி மாமா பதில் சொல்லி பாருங்கன்னு எல்லாம் நான் சொல்லலை. ஏன்னா அந்த படம் அப்ப வரலை) நானும் எல்லாம் தெரிஞ்சது போல (இப்ப சமாளிக்கிறது மாதிரியே) தலையை மையமா ஆட்டி சமாளிச்சுக்கிட்டு இருந்தேன்.

சரி இதெல்லாம் விடுங்க. உங்க புரொக்கிராம் எந்த லாங்குவேஜ்ல இருக்கு ‍ இது மாமா

இந்த கேள்விக்குதான் வடிவு அந்த சரித்திர புகழ் வாய்ந்த பதிலை டக்குன்னு சொன்னா. இங்கிலீஷ்ல‌தான் இருக்குங்க அண்ணா


அதுக்கு பிறகு அவர் கேள்வி அப்படின்றதை மறந்துட்டதெல்லாம் தனிகதை

சரி பேக் டு 2009 ஒ.கேவா. இதை நினைச்சு சிரிச்சுகிட்டு இருக்கும்போது ,

என்ன சிரிப்புன்னு வடிவு கேட்க இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, உன்னை நினைச்சேன். நானும் சிரிச்சேன்னு பாட்டு பாட வடிவு வழக்கம் போல டென்ஷன் டெரராத்தா ஆகி நீ ரொம்ப அறிவாளியா நான் ஸ்கூல் படிக்கும்போது ஒழுங்கா மார்க வாங்காம போனதுக்கு நீங்க‌தான் காரணம் தெரியுமான்னு புதுசா புவியியல் சொன்னா.

என்னாதுன்னு கேட்டா ஆல்பாபெட்டிக்கல் ஆர்டரில் என் பேரு T யில் தாரணின்னு வருமா எனக்கு அடுத்த பேரா உஷா அதுக்கும் அடுத்த பேரா வடிவுக்கரசி வருவா

உங்க ரெண்டு பேர் பேப்பரை திருத்தின பிறகு அந்த வாத்தியர் மனுசனா வா இருப்பார். அந்த கோபத்தை எல்லாம் என் பேப்பர்ல தான் காட்டி இருப்பார். அதுதான் எனக்கு மார்க் குறைச்சல் அப்படின்னு சொல்றா.

நிஜமாவே அவ காலேஜ் போனதுக்கு பிறகு நல்ல மார்க் வாங்கினதுக்கு இதுதான் காரணமா இருக்குமோ